×

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மூன்று உணவுகள்!

நன்றி குங்குமம் தோழி

சமீப காலத்தில் எல்லா தரப்பு மக்களுக்கும் சர்க்கரை நோய் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டைப்-2 நீரிழிவு குறித்த ஊட்டச்சத்து பற்றி உணவியல் ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி ஆலோசனைகளை விவரித்தார். டைப்-2 நீரிழிவு என்பது இந்தியாவில் அதிகரித்து வரும் பொது சுகாதார பிரச்சனையாகும். இது மரபணு பாதிப்பு, உணவு முறை மாற்றம் மற்றும் விரைவான வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

ஒரு ஆய்வின்படி, 2030-க்குள் இந்தியாவில் கிட்டத்தட்ட 98 மில்லியன் மக்கள் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம். உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் பற்றி வளர்ந்து வரும் தகவல்களுக்கு மத்தியில், ஒவ்வொரு பரிந்துரையும் உங்களுக்கு எது சரியாக இருக்கும் என்பதை கவனமாக ஆராய்ந்து அதை பின்பற்ற வேண்டும். நீரிழிவு நோயை சிறப்பாக நிர்வகிக்க உதவும் 3 உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பாதாம்

சிறிதளவு பாதாம் பருப்புகளை (30 கிராம்/23 பாதாம்) உட்கொள்வதன் மூலம், டைப் 2 நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுப்பாட்டினை மேம்படுத்தலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்க, பாதாம் பருப்பை உணவுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். பாதாமில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் வெளியீட்டை மெதுவாக்க உதவும். டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக அறியப்படுகிறது.

வைட்டமின் ஈ மற்றும் பாதாமில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் இதய சிக்கல்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, பாதாம் பருப்புகளை உட்கொள்வது, டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும். வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த பாதாம் உதவுகிறது. இது கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. நார்ச்சத்து, வைட்டமின்கள் (ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை), பைட்டோ கெமிக்கல்கள் (பைட்டோஸ்டெரால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்றவை), தாதுக்கள் (மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவை) மற்றும் நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள் அடங்கிய பாதாமின் ஊட்டச்சத்து கலவை இதற்குக் காரணம்.

பச்சை இலை காய்கறிகள்

ஒருவரின் உணவில் கீரைகளைச் சேர்ப்பது முக்கியமானது என்பதை நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம். ஆனால் ஆராய்ச்சியின் படி, பச்சை இலை காய்கறிகளை உட்கொள்வது டைப் 2 நீரிழிவு அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். கீரை, முட்டைக்கோஸ், முருங்கை இலைகள், புதினா இலைகள், பெருங்காய இலைகள், வெந்தய இலைகள், முள்ளங்கி மற்றும் பல…பச்சை இலைக் காய்கறிகள் அனைத்தும் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.

அவற்றில் சில ஆல்பா-லினோலெனிக் வடிவத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த பச்சை இலைக் காய்கறிகளை சூப்கள், சாலட்கள் அல்லது பச்சை காய்கறிகளின் சாறு என பல்வேறு வழிகளில் உட்கொள்ளலாம். காய்கறிகளை பொரியலாக சமைப்பதாக இருந்தால், அதிகப்படியான எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.

தயிர்

வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர் பல நூற்றாண்டுகளாக இந்திய உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. சமீப காலங்களில், தயிர் வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்காக மிகவும் பிரபலமாக உள்ளது. ஒரு ஆய்வின்படி, தயிர் உட்கொள்வது, ஆரோக்கியமான மற்றும் வயதானவர்களுக்கு அதிக இதய ஆபத்தில் இருக்கும் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. தினமும் உணவில் 80 முதல் 125 கிராம் தயிரினை சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய்க்கான ஆபத்து 14% குறையும். தயிரில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும், குடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது என்பதால், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த தயிர் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

தொகுப்பு: அனுஷா

The post சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மூன்று உணவுகள்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED குதிகால் வலி